Apr 17, 2026 - 03:51 PM -
0
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகத்தின் வேண்டுகோலுக்கிணங்க புதிதாக நிர்மானிக்கப்பட்ட கண்ணனி விளையாட்டு மைதானத்தின் ஜனா கருணாகரம் விளையாட்டரங்கு இன்று (17) திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
இதனை நாங்கள் இரண்டு பக்கமாகப் பார்க்க முடியும். ஒரு பக்கம் சர்வதேச ரீதியான அரசியல் தாக்கம் எந்த அளவுக்கு எமது உள்நாட்டு அரசியலைப் பாதிக்கின்றது அல்லது உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. அந்த வகையில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரானுக்கு எதிராகத் தொடுத்திருக்கின்ற அந்த யுத்தம் என்பது எரிபொருள் ரீதியில் எங்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
எரிபொருள் விலையேற்றம் என்பது எல்லாவற்றிற்கும் விலையேற்றத்தைக் கொண்டுவருகின்ற ஒரு விடயமாக இருக்கின்றபடியால், எரிபொருள் தட்டுப்பாடு அதனோடு சேர்ந்த விலை உயர்வு காரணமாக ஏற்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை உயர்வு காரணமாக மக்கள் பாதிக்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
இந்த நிலையில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்ற விவசாயிகள், மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அதேபோன்று வணிகத்துறை கூடப் பாதிக்கப்படுகின்றது, வணிகத்துறை பாதிப்பு என்று சொல்வதை விட அவர்கள் விலையேற்றங்களைச் செய்கின்ற போது சாதாரண நுகர்வோர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள்.
சாதாரண கூலியாட்கள் அதேபோன்று மத்தியதர வர்க்கத்தினர் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே அரசாங்கம் நிச்சயமாக உலக ரீதியாகப் பொருளாதார ரீதியால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்குரிய நிவாரணங்களை அல்லது மானியங்களைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் திறைசேரியில் ஓரளவு நிதி சேர்ந்திருக்கின்றது.
எனவே இந்த வெளிநாட்டு அரசியல், சர்வதேசப் போர் அரசியல் பாதிக்கப்படுகின்ற போது பாதிக்கப்படுகின்ற மக்களுக்குரிய நிவாரணங்களை, மானியங்களைக் கொடுப்பதற்கு அரசு தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்த காலத்தில் புத்தகம் வெளியிடுகின்ற ஒரு கலாச்சாரம் போய்க்கொண்டிருக்கின்றது. உதய கம்மன்பில புத்தகம் வெளியிடுகின்றார் என்றால் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஒன்று இருக்கின்றது. அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முக்கியமான சூத்திரதாரி அதாவது கொல்லப்பட்டவர்கள் தான் முக்கியமான சூத்திரதாரிகள், அதாவது அந்தத் தற்கொலைக் குண்டுதாரிகள் என்று கதையை முடிக்கப் பார்க்கின்றார்.
இதிலிருந்து எங்களுக்கு விளங்குகின்ற விடயம் என்னவென்றால் முக்கியமான சூத்திரதாரிகளைக் காட்டிக் கொடுக்கக்கூடாது அல்லது சட்டத்தின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தக்கூடாது என்பதற்காக இந்தப் புத்தகங்கள் எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆகவே இந்த அரசாங்கத்திடம் நாங்கள் மிகவும் ஒரு அன்பாகக் கேட்டுக்கொள்கின்ற விடயம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலமாக 269 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் வழிபாட்டுத் தலத்திலே கொல்லப்பட்டிருக்கின்றார்கள், பல நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நிச்சயமாக அந்த மக்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டுமாக இருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புவது என்பது மிகவும் கேவலமான ஒரு நிலைமை. அதனை கட்டாயமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கியமான சூத்திரதாரிகள் கைது செய்யப்பட வேண்டும்.
அதேபோன்று கடந்த காலத்தில் எங்களுடைய மக்கள் பல விதத்திலும் பாதிக்கப்பட்டார்கள். இந்த காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் என்ற ஒரு பட்டியல் ஒன்று இருக்கின்றது, அதற்கான நீதி கிடைக்க வேண்டும். இதையும் விடச் சொல்லப்போனால் இந்த அரசாங்கம் இனப்பிரச்சினை சம்பந்தமான விடயத்தில் இன்னும் கைவைக்கவில்லை. புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் அதனைச் செய்து முடிக்குமாக இருந்தால் அது ஒரு சாதனையாக இருக்கும். அதனைச் செய்ய வேண்டும் என்று கேட்கின்றோம். இன்னும் அந்த இனப்பிரச்சினை என்பதைச் சாதாரண பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று இவர்கள் நினைக்கின்றார்கள், அப்படியல்ல. நிச்சயமாகப் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படுமாக இருந்தால் தான் இலங்கைக்கு ஒரு எதிர்காலம் வாய்ப்பாக வசதியாக அமையும்.
இல்லையென்றால் இந்த அரசாங்கம், இந்த அரசு தொடர்ந்து 75 வருடங்களாகச் சீரழிக்கப்பட்ட அரசாங்கம் போன்றுதான் இருக்கும். எனவே இடதுசாரிச் சிந்தனை உடைய இந்தத் தேசிய மக்கள் சக்தியினர் அதனை உணர்ந்து இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, இப்போது மீண்டும் இனவாதிகள் தங்களுடைய ஏதோ ஒரு விடயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்கள் இப்போது விழித்தெழுந்து இருக்கின்றார்கள். எனவே இதற்கெல்லாம் பதில் கொடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய விடயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
தொல்லியல் என்ற போர்வையில், மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுகின்ற விடயத்தையும் அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாக இந்த அரசாங்கத்தையும் இனவாத அரசாங்கம் என்று மக்கள் நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்தார்.
--
