Apr 17, 2026 - 04:31 PM -
0
தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கில் செயற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், சில புல்லுருவிகள் தங்களது சுயநல அரசியல் சுகபோகத்திற்காக அந்த முயற்சிகளைத் தடுக்கின்றனர் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
துறைநீலாவணையில் நடைபெற்ற யுனைட்டெட் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை விளையாட்டுப் போட்டியில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் அரசியல் தீர்வைப் பெற வேண்டுமெனில் அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளும் ஓரணியில் இணைந்து, ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். இதற்காக பல அமைப்புகள் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சில அரசியல்வாதிகள் தங்களது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக அந்த முயற்சிகளைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நடிகர் விஜய் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படம் தொடர்பாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த திரைப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதில் காட்டப்படுவது போல சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக மக்களிடையே பிரிவினைவாதத்தை விதைத்து, அதன்மூலம் தாங்களே பலன் அடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மே. வினோராஜ் உள்ளிட்ட கிராம பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
