Apr 19, 2026 - 07:00 PM -
0
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று (19) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
அதேநேரம் மலையக தமிழ்க் கட்சிகளின் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் டித்வா புயலுக்கு பிந்தைய மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய அரசாங்கம் வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப் பொதிக்கும், காலப்போக்கில் வழங்கப்பட்ட ஏனைய நிவாரண நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்குத் தமிழ்க் கட்சிகளின் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
