Apr 24, 2026 - 10:38 AM -
0
தெற்கு லெபனான் மீது கடந்த 22 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் லெபனான் பத்திரிகையாளர் அமல் கலீல் கொல்லப்பட்டதாகவும், அவருடன் சென்ற புகைப்படக் கலைஞர் காயமடைந்ததாகவும் ஒரு மூத்த லெபனான் இராணுவ அதிகாரியும், அல்-அக்பர் ஊடகங்களும் தெரிவித்துள்ளன.
கலீலின் மரணம் குறித்து இஸ்ரேலிய இராணுவம் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. முன்னதாக, தங்களது தாக்குதல்களின் விளைவாக இரண்டு பத்திரிகையாளர்கள் காயமடைந்ததாக தகவல்கள் கிடைத்திருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
43 வயதான கலீலின் மரணத்தை தொடர்ந்து, கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
இஸ்ரேலுக்கும் லெபனான் ஆயுத குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல்களை நிறுத்துவதற்காக ஏப்ரல் 16 அன்று 10 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, இதுவே மிகவும் மோசமான உயிரிழப்புகள் நிகழ்ந்த நாளாகும்.
கலீலும் சுயாதீன புகைப்பட கலைஞர் ஜெய்னப் ஃபராஜும் அல் - தய்ரி நகருக்கு அருகிலுள்ள நிகழ்வுகளை பதிவு செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு முன்னால் சென்ற வாகனம் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடத்தப்பட்டது.
அவர்கள் அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் ஓடி ஒளிந்தனர், அந்த வீடும் பின்னர் இஸ்ரேலிய தாக்குதலுக்கு உள்ளானது என்று லெபனானின் சுகாதார அமைச்சகம், மூத்த லெபனான் இராணுவ அதிகாரி மற்றும் பத்திரிகை ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
