Apr 25, 2026 - 09:25 AM -
0
ரஷியாவுடன் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடும் போர் புரிந்து வரும் உக்ரைன் நாடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நிதிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.
போருக்காகத் தன் கஜானாவைக் காலி செய்துள்ள உக்ரைனுக்கு புதிய உயிர் கொடுக் கும் வகையில் சுமார் 90 பில்லியன் யூரோ நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியுதவிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்த ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், சமீபத்திய தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
இதையடுத்து அங்கு அமைந்த புதிய அரசு, இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் பல மாதங்களாக முடங்கிக் கிடந்த நிதி சிக்கல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிதியுதவி குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறுகையில் "இந்த நிதி எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய நிம்மதி. இருப்பினும், இது முழுமையானது அல்ல. எங்களின் ஆயுதத் தொழிற்சாலைகளின் முழுத் திறனில் 60 சதவீதத்தை மட்டுமே இந்த நிதியால் பயன்படுத்த முடியும். மின்சாரக் கட்டமைப்பைச் சீரமைக்க இன்னும் கூடுதல் நிதி தேவைப்படுகிறது." என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்துக்குள் இந்த நிதி கிடைக்காவிட்டால் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். தற்போது இந்த நிதி உக்ரைனுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
