Apr 27, 2026 - 01:12 PM -
0
எம்ஜிஆர் எனக்கு சாபம் கொடுத்தார்” என நடிகர் சிவக்குமார் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் ‘மார்க்கண்டேயன்’ என்று அழைக்கப்படுபவர், என்றென்றும் இளமையாக இருக்கும் நடிகர் சிவகுமார். 84 வயதானாலும் தான் என்றும் 16 உற்சாகத்தோடு இருக்கும் நடிகர் சிவகுமார், அவ்வப்போது தனது இளமையில் ரகசியத்தை பகிர்ந்து வருகிறார்.
முதலில் தன் உணவுப்பழக்கவழக்கம் பற்றி கூறிய சிவகுமார், “மனிதன் உயிர்வாழ தேவை காற்று, நீர் மற்றும் உணவு. இதில் உணவை பொறுத்தவரை தினமுமே காலையில் ஒரு கை பழைய சாதம் சாப்பிடுவேன். கூடவே, இரண்டு டம்ளர் அடித்த மோர் குடிப்பேன். கூடவே பப்பாளி 4 துண்டும், கொய்யா 4 துண்டும் சாப்பிடுவேன். எப்போதும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்” என்றுள்ளார்.
“என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்களாக ஆக்கியது போதும். கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல் கடைக்கோடி மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.” என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு மன்றம் சார்பில் பத்மஸ்ரீ அவ்வை சண்முகத்தின் 114வது பிறந்த நாள் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வில் பேசிய சிவக்குமார், “எம்ஜிஆர் என்னுடைய 100 ஆவது படத்தில் சொன்ன விஷயம், 1979 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது அவர் பேசும்போது ‘முருகன் என்றால் அழகு இளமை. இந்த சிவக்குமார் வாழும் காலம் வரை இளமையோடு இருப்பான் என சாபம் கொடுத்து விட்டுச் சென்றார். 1979 இல் அவர் சாபம் கொடுத்தார். இன்று எனக்கு வயது 85 ஆகிறது. பார்த்தால் வயதானவர் போல தெரிகிறதா?” என்றார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
