Apr 27, 2026 - 03:37 PM -
0
ஹட்டன் – டிக்கோய நகர சபையின் இன்று (27) இடம்பெற்ற மாதாந்த அமர்வு நடைபெற்றது. கடந்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின் சபை அறிக்கையில் (Minutes) நிலவிய குளறுபடிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கூட்டமே இன்று மீண்டும் கூடியது.
கூட்டம் தொடங்கியவுடன் ஆளும்கட்சி உறுப்பினர் வைத்தியர் தர்மபிரிய சபை அறிக்கையைப் பற்றிய எந்த கருத்தையும் தெரிவிக்காமல் சபையின் அனுமதி பெற்று வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் ஹட்டன் – டிக்கோய நகரசபை தலைவரும் உறுப்பினருமான வைத்தியர் நந்தகுமார் சபை அறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினார்.
பின்னர் சபை அறிக்கைக்கு அனுமதி வழங்க மறுத்த மேலும் சில உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறினர்.
இது குறித்து கருத்து தெரிவித்த உப தலைவர் சுரேந்திரா,
"கடந்த கூட்ட அறிக்கையில் பல தவறுகள் இருந்தன. அவற்றை 3 நாட்களுக்குள் திருத்தி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை திருத்தப்பட்ட அறிக்கை எமக்கு வழங்கப்படவில்லை. இதனால் முறையற்ற அந்த அறிக்கையை அங்கீகரிக்க முடியாது," எனத் தெரிவித்து 8 உறுப்பினர்களுடன் சபையிலிருந்து வெளியேறினார்.
இந்த அமர்வின் போது சுயேட்சைக் குழு உறுப்பினர் கேசவமூர்த்தி தனது வாயில் பிளாஸ்டர் ஒட்டிக்கொண்டு சபையில் அமர்ந்திருந்தார். தனக்கு சபையில் கருத்து தெரிவிக்க உரிமை மறுக்கப்படுவதை அடையாளப்படுத்தும் வகையில் அவர் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
சபை அறிக்கை தொடர்பான இழுபறி நிலை காரணமாக நகர சபையின் நிர்வாக நடவடிக்கைகள் தற்போதும் சிக்கலிலேயே நீடிக்கின்றன.
--
