Apr 28, 2026 - 09:45 AM -
0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் மேற்பார்வையில் நடைபெற்றது.
நேற்று எந்தவிதமான மனித எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்படவில்லை முதற்கட்டமாக புதைகுழி அமைந்துள்ள பிரதேசத்தை தயார்ப்படுத்தும் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று ஆரம்பமாகியுள்ள மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான பாதீடு நீதி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிதி யாழ். மேல் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை 56 நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் படி இரண்டு வாரகால அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கை முடிவில், மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் 239 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம், அகழ்வு பணிகளை முன்னெடுக்க ஏதுவாக புதைகுழி பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று (28) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
--
