Apr 28, 2026 - 11:34 AM -
0
தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23 ஆம் திகதி ஒரே கட் டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அவை அனைத்தும், அங்குள்ள 'ஸ்டிராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன.
தொடர்ந்து அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் முன்னிலையில், அதிகாரிகள் அந்த அறைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடங்களுக்கு தகுந்தபடி 3, 4,5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
பாதுகாப்பு அரணின் முதல் அடுக்கில் எந்திர துப்பாக்கி ஏந்திய துணை இராணுவப்படை வீரர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணுமை மைய பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக 'ஜனநாயகன்' படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, 'ஜனநாயகன்' படம் பார்த்ததை அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், ஒப்பந்த ஊழியரான அவரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிசிடிவி அறையில் யுவராஜ் டெக்னிகல் ஹெட் ஆக பணியமர்த்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
