Apr 30, 2026 - 03:40 PM -
0
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் முயற்சி மற்றும் அச்சுறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் இன்று (30) காலை முதல் கறுப்புப் பட்டி அணிந்து அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 28-ஆம் திகதி மஸ்கெலியா பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரைத் தாக்குவதற்காக மற்றுமொரு குழுவினர் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இதனைத் தடுக்க முயன்ற வைத்தியசாலை ஊழியர் மற்றும் தாதியர் ஒருவரை, அக்குழுவினர் தகாத வார்த்தைகளால் பேசித் தாக்க முற்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.என். ரிசான் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என வைத்தியசாலை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, இன்று (30) சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--
