May 6, 2026 - 09:45 AM -
0
ஹொங்கொங் அன்ட் ஷாங்ஹாய் பாங்கிங் கோர்பரேஷனின் (HSBC) இலங்கையின் தனிநபர் வங்கிப் பிரிவுச் செயற்பாடுகளை NTB கையகப்படுத்தும் நடவடிக்கைகளை உத்தியோகபூர்வமாக பூர்த்தி செய்துள்ளதாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி அறிவித்துள்ளது. 2026 மே மாதம் 1ஆம் திகதி முதல் HSBC இன் சகல செயற்பாடுகளும் NTB இன் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
HSBC ஸ்ரீ லங்காவின் தனிநபர் வங்கிப் பிரிவு வாடிக்கையாளர்களை தமது செயற்பாடுகளினுள் உள்வாங்கியதன் மூலமாக தொடர்ச்சியான சேவை மற்றும் வாடிக்கையாளர் உறவு ஆகியன பேணப்படுவதை உறுதி செய்துள்ளது. இந்த ஒன்றிணைப்பு செயற்பாட்டின் அங்கமாக HSBC ஸ்ரீ லங்கா ஊழியர்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தடையற்ற, செயற்பாட்டு உறுதித் தன்மையில் கவனம் செலுத்தி இந்த மாற்றச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், NTB இன் வங்கி நடைமுறைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கான தொடர்ச்சியான வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.
இந்த மாற்றத்தினூடாக சுமார் 200,000 வாடிக்கையாளர்கள் NTB இன் மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவற்றில் சேமிப்பு மற்றும் நடைமுறைக் கணக்குகள், நிலையான வைப்புகள், கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகள் மற்றும் நுகர்வோர் கடன்கள் உள்ளடங்குவதுடன் HSBC இன் உயர்-பெறுமதி (high-net-worth) வாய்ந்த வாடிக்கையாளர் பிரிவு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரைவேட் பாங்கிங் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தினூடாக நாடளாவிய நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கிக் கிளைகள் வலையமைப்பு தற்போது 96 ஆக உயர்ந்துள்ளது. ஏழு கிளைகள் வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், பம்பலப்பிட்டி, பிளவர் வீதி, யூனியன் பிளேஸ் மற்றும் பெலவத்தை ஆகியன பிரத்தியேகமான பிரைவட் பாங்கிங் நிலையங்களாக செயலாற்றுகின்றன. ஏனைய மூன்று கிளைகளும் நுகேகொட, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.
இந்த மாற்றங்கள் நடைபெறும் காலப்பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில், பல சேவைப் பகுதிகள் மற்றும் உதவிப் பிரிவுகளை அணுகும் வசதியை NTB உறுதி செய்துள்ளது. அருகிலுள்ள NTB கிளையினூடாக, +94 11 441 4151 ஊடாக NTB இன் 24 மணி நேர உதவிச் சேவை மற்றும் Nations Direct mobile app ஆகியவற்றினூடாக வாடிக்கையாளர்கள் தமது வங்கிச் சேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த மாற்றம் தொடர்பான தகவல் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் போன்றவற்றை https://migration.nationstrust.com இல் பார்வையிட முடியும்.
மேலும், இந்த மாற்றத்தின் அங்கமாக இரு வார இறுதி நாட்களில் நீடிக்கப்பட்ட கிளை உதவிச் சேவைகளை பெற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பத்தொன்பது NTB கிளைகள் மே 2 சனிக்கிழமை மற்றும் மே 3 ஞாயிற்றுக் கிழமை ஆகிய தினங்களில் திறக்கப்பட்டிருந்தன. மேலும் மே 9 சனிக்கிழமை மற்றும் மே 10 ஞாயிற்றுக் கிழமை ஆகிய தினங்களில் மு.ப. 9.00 முதல் மதியம் 12 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு அவசியமான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திறந்திருக்கும் கிளைகளில் ஹோட்டன் பிளேஸ் பிரைவட் பாங்கிங் நிலையம், கல்கிசை, பாணந்துறை, நீர்கொழும்பு, மஹரகம, புறக்கோட்டை பாங்ஷோல் வீதி, நுகேகொட, குருநாகல், கிரிபத்கொட, தலவத்துகொட, கொஹுவல, இரத்தினபுரி, மட்டக்களப்பு, ஹவ்லொக் டவுன், வத்தளை, மாத்தறை, காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகியன உள்ளடங்கும்.
HSBC உடன் ஆரம்ப விற்பனை மற்றும் கொள்முதல் உடன்படிக்கை 2025 செப்டெம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டதை தொடர்ந்து, HSBC இன் தனிநபர் வங்கியியல் பிரிவின் வியாபாரத்தை கையகப்படுத்துவதற்கான அனுமதியை 2025 டிசம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்து NTB பெற்றுக் கொண்டது. இந்த முக்கிய மைல்கற்கள், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் திட்டமிட்டபடி HSBC இன் வியாபாரக் கையகப்படுத்தலை NTB நிறைவு செய்ய வழிவகுத்தன.
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பற்றி
நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி, தனது பௌதீக மற்றும் டிஜிட்டல் ரீதியிலான பல்வகைப்பட்ட வாடிக்கையாளர் தொடர்பு மையங்களின் ஊடாக நுகர்வோர், வர்த்தக மற்றும் நிறுவனப் பிரிவுகளைச் சார்ந்த பல்வேறு வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றி வருகின்றது. அதிநவீன டிஜிட்டல் வங்கித் தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்களை வலுப்படுத்துவதில் இவ்வங்கி அதிக கவனம் செலுத்துகின்றது. இலங்கையில் American Express அட்டைகளை விநியோகிக்கும் உரிமையையும், அதன் ஒரே ஒரு கொடுப்பனவு ஏற்றுக் கொள்ளும் (Sole Acquirer) உரிமையையும் கொண்டுள்ள நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி, உயர்தர சந்தைப் பிரிவுகளில் முன்னிலை வகிக்கின்றது.
