May 13, 2026 - 12:36 PM -
0
வாழைச்சேனை, சூடுபத்தினசேனை பகுதியில் உள்ள கழிவுகள் கொட்டும் இடத்தில் யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் அமைந்துள்ள கழிவு கொட்டும் இடத்திற்கு, வழமை போன்று குப்பைகளைக் கொட்டச் சென்ற பிரதேச சபை ஊழியர்கள், யானை ஒன்று அசைய முடியாத நிலையில் கிடப்பதைக் கண்டு உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, அந்த யானை ஏற்கனவே உயிரிழந்திருப்பதை உறுதி செய்தனர்.
தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையில், யானையின் உடலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குப்பை மேடுகளில் உணவு தேடி வரும் காட்டு யானைகள் பல்வேறு அபாயங்களை எதிர்கொள்வதாகவும், இத்தகைய சோகமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உரிய தீர்வுகள் காணப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
--
