May 15, 2026 - 10:24 AM -
0
இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது. இன்று அனைத்து துறைகளும் சுயாதீனமாக செயற்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசாரணைகள் அனைத்து சுயாதீனமாக முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை - தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று (14) நடைபெற்றது.
மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரின் ஓழுங்கமைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ.சிறிநாத்,மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் கிரேஸகுமார் உட்பட திணைக்கள தலைவர்கள்,பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் அவற்றினை விரைவுபடுத்துவதற்கு முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதேபோன்று முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதிகளும் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் விசேடமாக பிரதேசத்தில் நடைபெறும் சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
கசிப்பு உற்பத்தி, சட்ட விரோத மண் கடத்தல், கால்நடைகள் கடத்தல் உட்பட நடைபெறும் பல்வேறு சட்ட விரோத செயற்பாடுகளை தடுப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டதுடன் இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதேபோன்று கொக்கட்டிச்சோலை நகரில் வீதி புனரமைப்பு செயற்பாடுகளில் ஈடுபட்ட நிறுவனம் முறையாக பணியை புனரமைப்பு செய்யாமல் பாரியளவில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளை தடைசெய்யும் வகையிலான தீர்மானமும் இங்கு நிறைவேற்றப்பட்டது.
இதன்போது பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் தீர்வுகளும் வழங்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் சில பிரச்சினைகள் குறித்து விசேட கூட்டங்களை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரபு,
இந்த நாட்டிலே கடந்த காலங்களிலே பல ஊழல் மோசடிகள் இடம் பெற்றிருக்கின்றன. நாங்கள் இந்த ஆட்சி பீடம் ஏறும் போது மக்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஒரு விடயம். இந்த நாட்டிலே இடம்பெற்றிருந்த ஊழல் மோசடிகளை இல்லாமச் செய்வதும், அதேநேரம் ஊழல் மோசடிகளோட சம்பந்தப்பட்டவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வந்து, அவர்களுக்கு உரிய தண்டனைகளை வழங்க வேண்டும் என்பதிலே அவர்கள் எங்களுக்கு எங்களுக்காக வாக்களித்திருந்தார்கள். அந்த கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்கள்.
ஆகவே எங்களது கொள்கையிலேயும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். ஊழல் மோசடியற்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம் என்பதை. அந்த அடிப்படையிலே நாங்கள் அந்த விடயத்தை முன்னெடுத்துக்கொண்டு வருகின்றோம். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆ கூடுதலான தரப்பினர்களுக்கு எதிராக ஊழல் மோசடிகளோட சம்பந்தப்பட்ட பல வழக்குகள் இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்காய் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது.
முன்னாள் அமைச்சர்கள் அது மாத்திரம் கிடையாது ஜனாதிபதிகளுக்கு கூட எதிராக இன்று இப்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்துமே எதிர்க்கட்சியினர் இது ஒரு அரசியல் சாயம் பூச முற்படுகின்ற அதேவேளை இது ஒரு அரசியல் பழிவாங்கல் என மக்கள் மத்தியிலே அவர்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இது எந்த வகையிலும் அரசியல் பழிவாங்கல் கிடையாது. இந்த நாட்டிலே இடம்பெற்ற மோசடிகளை விசாரணைப்படுத்தும் போது அது தொடர்பாக பின்னிட்டு முண்டு செயற்பட்டவர்களாக இந்த முன்னாள் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் அதோடு ஒத்ததாக இன்று ஜனாதிபதிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் தாங்கள் உழைத்துக்கொள்வதற்காக தங்களது அரசியல் செயற்பாட்டுக்காகவும் தங்களது குடும்பங்களை வளர்த்துக்கொள்வதற்காகவும் இந்த மோசமான செயற்பாடுகளை இந்த நாட்டை வீழ்த்துகின்ற இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்கின்ற விதமான பல விடயங்களை அவர்கள் முன்னெடுத்திருக்கின்றார்கள்.
அது சட்டரீதியாக இப்போது அது முன்னடு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. எங்களது காலகட்டத்திலே நாங்கள் சுயாதீனமாக இயங்குவதற்காக அனைத்து துறைகளை நாங்கள் உட்படுத்தி இருக்கின்றோம். உங்களுக்குத் தெரியும் பொலிஸார் இன்று சுயாதீனமாக செயல்படுகின்றது, அதனைப் போன்று நீதித்துறையும் இன்று சுயாதீனமாக செயல்படுகின்றது.
அவை இவை அனைத்தையும் விசாரணை செய்து அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கான தண்டனைகளை வழங்குவதற்கான விடயங்களை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இதிலே தான் எயர்பஸ் மோசடி தொடர்பான ஒரு விடயம் தற்போது பேசுபொருளாக இருக்கின்றது. அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் போது அதன் பின்புலத்திலே ராஜபக்சக்கள் விஷயமாக மகிந்த ராஜபக்ச பின்னணி இருப்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே அது தொடர்பான விசாரணைகளுக்காக அவரை அழைத்திருந்தார்களே தவிர அவருக்கு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தான் அவரை அழைத்திருந்தார்கள் அதாவது சொல்லப்போனால் அவரது வாக்கு மூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவரை அழைத்திருந்தார்கள் ஆனால் அவர்கள் கூட்டிவந்த தரப்பினர் அல்லது அவர் ஆதரவாளர்கள் என குறிப்பிட தரப்பினை கூட்டிக்கொண்டு வந்து அவருக்கு தொடர்பாக அவர்கள் ஏதோ வாழ்த்துக்களையும் கூறி அவரை புகழ்ந்து கொண்டு அந்த விடயத்தை செய்திருக்கின்றார்கள்.
சாதாரணமாக ஒருவர் தவறினை ஈடுபடும் போது அல்லது ஒரு குற்றச்சாட்டுக்கள் ஈடுபடும் போது அவர் தொடர்பான விசாரணை மேற்கொள் வேண்டி இருக்கும். ஆகவே அந்த இடத்திலேயே அவர்கள் நேரடியாகச் சென்று தங்களது வாக்கு மூலத்தை வழங்குவார்கள். இது சாதாரணமான ஒரு விசாரணை நடைமுறை, இது தான் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றது. இதற்குச் செல்லுவதற்குக் கூட அவர்கள் பயப்பட்டு கொண்டிருக்கின்றார்கள்.
இங்கே எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூடுதலான தரப்பினர் நான் சொன்னது போன்று எல்லா விதமான குற்றச் செயல்களிலும் சம்பந்தப்பட்டவர்களாகவும் விஷயமாக இந்த மோசடிகளோட சம்பந்தப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகவே சட்டம் அனைவருக்கும் சமன் என்ற அடிப்படையிலே நாங்கள் செயல்படுகின்றோம். அது பெரியவராக இருந்தாலும் சரி சிறியவராக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சட்டம் சமனாக செயல்படுகின்றது.
--
