May 16, 2026 - 07:56 AM -
0
லெபனான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், ஏற்கனவே அமுலில் உள்ள போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையில் மேற்கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் காண்பதற்கு ஏதுவாக, கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.
ஏற்கனவே நீட்டிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தம், வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் காலாவதியாகவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிரந்தர அரசியல் உடன்பாட்டை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்க வெளியுறவுத்துறை வரும் ஜூன் 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது.
அதற்கு முன்னதாக, வருகிற 29ஆம் திகதி இரு நாடுகளின் இராணுவ பிரதிநிதி குழுக்களை ஒன்றிணைக்க அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் திட்டமிட்டுள்ளது.
