May 16, 2026 - 10:14 AM -
0
உலக அளவில் பால் தரும் உயர்தர ஆடுகளைப் பாரம்பரிய முறையில் வளர்த்து, ஒரு புதிய மந்தையை உருவாக்க குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. இது கால்நடைத் துறையில் ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது. இந்த நீண்ட காலக் காத்திருப்புக்குச் சீன விஞ்ஞானிகள் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
சீனாவின் 'நார்த்வெஸ்ட் ஏ அண்ட் எப்' பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர், ஆண்டுக்கு 2 ஆயிரத்து 800 கிலோவுக்கும் அதிகமாகப் பால் தரும் 'சானென்' ரக ஆடுகளின் உடல் செல்களை எடுத்தனர். மேம்பட்ட குளோனிங் தொழில்நுட்பம் மூலம் ஆய்வகத்தில் புதிய கருக்களை உருவாக்கினர்.
இந்த சோதனையின் வெற்றியாக, தற்போது ஒரே பிரசவத்தில் 4 ஆண், 2 பெண் என 6 'சூப்பர் ஆடுகள்' ஆரோக்கியமாகப் பிறந்துள்ளன. இவை அனைத்தும் அசல் தாய் ஆடுகளைப் போலவே அதிக புரதச்சத்துள்ள பால் தரும் மரபணுத் திறனையும், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொண்டுள்ளன. சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின்படி, நாட்டின் பால் உற்பத்தியைப் பெருக்க இந்த அதிநவீன தொழில்நுட்பம் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
