May 17, 2026 - 03:11 PM -
0
வனவாசல மற்றும் களனி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபரும், அந்தப் பாகங்களை கொள்வனவு செய்த நபரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (16) அதிகாலை களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது.
இரண்டு ரயில் பாதைகளுக்கு இடையே ரயில்களைப் பாதை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் 'பொய்ண்ட்' பகுதியின் இரும்புகளை அகற்றியமையே இந்த விபத்துக்குக் காரணம் என ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அத்தியட்சகர் அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
பேலியகொட பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த ரயில் பாதையின் பாகங்களைக் கழற்றிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்த இரும்புப் பாகங்களை 3 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்த மற்றுமொரு நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
