May 17, 2026 - 06:33 PM -
0
உஸ்பெகிஸ்தான் - தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற 2026 மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் சேம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
சற்று முன்னர் நிறைவடைந்த மகளிருக்கான இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த கசகஸ்தான் அணியை 27-00 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இலங்கை வீராங்கனைகள் சேம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றனர்.
ஆட்டம் முழுவதும் தமது முழு ஆதிக்கத்தைச் செலுத்திய இலங்கை அணி, கசகஸ்தான் அணிக்கு ஒரு புள்ளியைக் கூட பெறவிடாமல் தடுத்தமை இப்போட்டியின் சிறப்பம்சமாகும்.
பெண்கள் அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு முன்னதாக நடைபெற்ற ஆடவருக்கான இறுதிப் போட்டியில், இந்திய அணியை 31-10 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இலங்கை ஆண்கள் அணி சேம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தது.
இந்திய அணிக்குக் கடுமையான நெருக்கடியைக் கொடுத்து இலங்கை வீரர்கள் இந்த வெற்றியைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
