May 17, 2026 - 10:41 PM -
0
வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்புச் சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பத்தரமுல்லையில் உள்ள தூதரக விவகாரப் பிரிவின் முதன்மைக் அலுவலகம் உட்பட யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பிராந்திய தூதரக அலுவலகங்களின் சேவைகளும் இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய தொழில்நுட்ப சேவை வழங்குநர்களுடன் இணைந்து, 'e-DAS' முறைமையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வழமைக்குக் கொண்டுவந்து, சாதாரண சேவைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே இணையவழியில் (Online) நேரத்தை ஒதுக்கியுள்ள (Appointments) விண்ணப்பதாரர்கள், அடுத்தகட்ட அறிவிப்புகள் மற்றும் இற்றைப்படுத்தல்களுக்கு 'e-Channeling' முறைமையை அவதானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முறைமை வழமைக்குத் திரும்பியவுடன் அது குறித்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அறிவிக்கப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் முடக்கம் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்குத் தூதரக விவகாரப் பிரிவு தமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
