May 19, 2026 - 09:09 AM -
0
பாராளுமன்றம் இன்று (19) மீண்டும் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வின் போது, உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
நாளை (20) இலங்கை மத்திய வங்கியினால் 2025ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட பொருளாதார மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளதுடன், வியாழக்கிழமை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மே மாதம் 22ஆம் திகதி, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனுதாபப் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பொதுச்செயலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நாட்டின் வரி முறையை எளிமைப்படுத்துவதே நோக்கமாகும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இந்த வரி திருத்தச் சட்டமூலத்தின் மூலம் வரி செலுத்துவதை தாமதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
