May 21, 2026 - 05:11 PM -
0
மஸ்கெலியா பகுதியில் இன்று (21) இயக்கப்பட்ட 28 வாகனங்களை 30 நாட்களுக்கு தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள், ஹட்டன் பிராந்திய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் இணைந்து இன்று மஸ்கெலியா -சிவனொளிபாத மலை வீதி, மஸ்கெலியா - ஹட்டன் வீதி, மஸ்கெலியா - சாமிமலை வீதி மற்றும் உப வீதிகளில் இயக்கப்பட்ட தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், கெப் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 40 வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
பரிசோதிக்கப்பட்ட வாகனங்களில், வாகனத்தின் அசல் அமைப்பை மாற்றியமைத்தல், ஆபத்தான முறையில் வாகனங்களில் மேலதிக உதிரிப்பாகங்களை பொருத்துதல் மற்றும் வாகனங்களின் பிரேக் அமைப்பு முறையாக இயங்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 28 வாகனங்களை தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக சேவையிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்களின் குறைபாடுகளை 30 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, முழுமையாக பழுதுபார்த்து மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வரை, அந்த வாகனங்களின் வருடாந்த வருமான வரி அனுமதிப்பத்திரங்களை மோட்டார் வாகன பரிசோதகர் தனது பொறுப்பில் எடுத்துள்ளார்.

