May 21, 2026 - 10:06 PM -
0
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கட்டுப்பாடின்றி வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக அரசாங்கம் கடுமையான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அக்கட்சி, தெளிவான பொருளாதாரத் திட்டம் இல்லாதமை மற்றும் நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிக்க அரசாங்கம் தவறியமை ஆகியவற்றின் காரணமாகவே அமெரிக்க டொலரின் மதிப்பு வேகமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 20 மாதங்களுக்கு முன்பு தற்போதைய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைக்கும் போது, டொலரின் மதிப்பு 292 ரூபாயாகக் காணப்பட்டது என்பதை ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லத் தவறியதன் காரணமாகவே, தற்போது டொலரின் மதிப்பு 354 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

