May 22, 2026 - 07:15 AM -
0
நிலவும் பலத்த மழை காரணமாக, அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று (21) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அத்திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
இதற்கமைய, தூனமலை நீர் அளவீட்டு நிலையத்தின் தரவுகளின்படி தற்போது 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், சில இடங்களில் 250 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக கம்பஹா, கட்டான, வத்தளை போன்ற தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சில இடங்களில் 200 - 300 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, இது தொடர்பான மேலதிக நிலவரங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வூட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

