May 22, 2026 - 02:38 PM -
0
ஆர்ஜே பாலாஜி - சூர்யா கூட்டணியில் கடந்த 15 ஆம் திகதி வெளியான படம் தான் கருப்பு. திரிஷா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சாய் அபியங்கர் இசையில், வெளியான கருப்பு படம், வெளியான 7 நாட்களில் ரூபா 200 கொடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல்முறையாக 200 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்த படமாக கருப்பு திகழ்ந்து சாதனை படைத்திருக்கிறது. இப்படத்தில் நடித்த இந்திரன்ஸ், கருப்பு படத்தில் நடிக்க என்ன காரணம் என்று மலையாள செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்து பகிர்ந்துள்ளார்.
எனக்கு மற்ற மொழி படங்களில் நடிப்பதில் பயம் இருக்கும். அதுவும் சூர்யாவுடன் நடித்த போது பயமாக இருந்தது. புதிய மொழியில் கனமான ரோல்களில் நடிக்க வேண்டியிருந்ததால் பதற்றமாக உணர்ந்தேன். இருந்தாலும், அந்த கதாபாத்திரம் மலையாளி என்ற ஒரே காரணத்தால் தான் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அந்த கதாபாத்திரம் மலையாளி என்பதை அவர்கள் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அது எனக்கு ஆறுதலைக் கொடுத்தது. இல்லாவிட்டால் நான் அந்த படத்தில் நடித்திருக்கமாட்டேன்.
அப்படத்தில் நடிக்கும்போது தான் முதன்முறையாக சூர்யாவை பக்கத்தில் பார்த்தேன், அவரை பார்த்ததும் பதற்றமடைந்தேன். சூர்யா மிகவும் அன்பானவராகவும், பணிவானவராகவும் இருந்தார். உண்மையில் அவர் அருகில் இருக்கும்போது, அவரின் பணிவே உங்களை சங்கடப்பட வைக்கும். தமிழ் மிகவும் மதிப்புக்குரிய மொழி. எனக்கு அந்த மொழி கொஞ்சம் தான் தெரியும் என்பதால் அதை பேசி அவமானப்படுத்த ஒருபோதும் விரும்பமாட்டேன் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் இந்திரன்ஸ்.

