May 22, 2026 - 05:36 PM -
0
தனக்கு வரவேண்டிய சம்பள பாதியை தராமல் நடிகை ராதிகா சரத்குமார் ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை அடுக்கடுக்கான புகார்களை கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை விஜி சந்திரசேகர். இவர் கே பாலச்சந்தர் இயக்கிய ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானவர். நடிகை சரிதாவின் தங்கையான இவர், தன் முதல் படத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார். பின்னர் பாரதிராஜாவின் ‘கிழக்குச் சீமையிலே’ படம் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்த அவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் விஜி சந்திரசேகர் திரைத்துறையில் தான் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். தான் நன்றாக நடித்த போதும் சரியான சம்பளம் கிடைக்கவில்லை என்றும், தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்கிற ஏக்கம் ஏற்படுவதாகவும், இதனால் திரைத்துறையில் இருந்து சென்று விடலாமா என்று பலமுறை யோசித்து இருப்பதாக வேதனையுடன் கூறி இருக்கிறார். நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்தபோதும் தனக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அதைப்பற்றி தான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், பலரும் தன்னை பிற நடிகர்களுடன் ஒப்பிட்டு, “அவரை விட நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள்” என்று கூறுவார்கள். அவர்கள் நடிக்க மட்டும்தான் செய்கிறார்கள், ஆனால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்கிறீர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு தரும் சம்பளம் கூட எனக்கு கிடைக்காது. வெயில், மழை என அனைத்து காலத்திலும் நடிப்பேன். ஆனால் சம்பளம் வாங்குவதற்கு போராட வேண்டி இருக்கும். சில நடிகர்கள் முதலில் சம்பளத்தை எடுத்து வையுங்கள். அதன் பின்னர் நடிக்கிறேன் என்று காறாராக இருப்பார்கள். ஆனால் நான் சம்பளம் விஷயத்தில் அவ்வளவு கறார் காட்ட மாட்டேன். படம் நன்றாக வரவேண்டும், அதன்பின்னர் சம்பளம் வாங்கிக் கொள்ளலாம் என்று இருப்பேன். ஆனால் படம் முடிந்த பின்னர் குட் பை சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்கள்.
நடித்து முடித்த பிறகு இன்றைக்கு சம்பளம் தருகிறேன், நாளைக்கு சம்பளம் தருகிறேன் என்று கூறுவார்கள். எத்தனையோ நாள் போய்விட்டது. ஆனால் எனக்கு இன்னும் சம்பளம் வரவில்லை. சம்பளம் கொடுத்தால் தான் நடிப்பேன் என்று கூறுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. நான் ஒரு சீரியலில் நடித்து முடித்து எட்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்னமும் சம்பளம் வரவில்லை. பிரபல தொலைக்காட்சி தொடர் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடித்து கொண்டிருந்தார்கள். அந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டதால் ராதிகாவால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. எனவே அவர் அதிலிருந்து விலகினார். அவருடைய கதாபாத்திரத்தில் என்னை நடிக்கச் சொன்னார். நான் முதலில் மறுத்தேன். ஆனால் எனக்காக இதில் நடிக்க வேண்டும் என்று ராதிகா கேட்டுக் கொண்டார்.
ராதிகா எனக்கு ஒரு அக்கா மாதிரி. அவர் சொன்னதால் இரவு பகலாக அந்த சீரியலில் நடித்தேன். ஆனால் அந்த தொடரை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். அந்த சீரியல் முடியப்போவது எனக்கு தெரியாது. என்னுடன் நடித்த நடிகர்கள் பலரும், “இன்று கடைசி நாள் ஷூட்டிங்” என்று என்னிடம் கூறினார்கள். ஆனால் நம்பவில்லை. நான் லீட் ரோலில் நடிக்கிறேன். எனக்குத் தெரியாமல் அப்படி எல்லாம் நிறுத்த மாட்டார்கள் என்ற கூறி, என் சக நடிகர்களையும் ஷூட்டிங் க்கு அழைத்துச் சென்றேன். ஆனால் எனக்கே தெரியாமல் சீரியலை நிறுத்தி விட்டார்கள். ஷூட்டிங் முடிவதற்கு முன்பு மாலை 6:00 மணியளவில் வந்து இதுதான் கடைசி ஷூட்டிங் என்று கூறினார்கள். எனக்கு மிகுந்த மன வேதனை ஏற்பட்டது. நான் சமாதானம் கூறி அழைத்து வந்த சக நடிகர்களின் முகத்தை எப்படி பார்ப்பேன்? நான் மட்டும் சம்பளம் வாங்கி விட்டதாக நினைத்து இருப்பார்கள்.
ஆனால் எனக்கு சம்பளம் தரவில்லை. 18 லட்ச ரூபாய் பாக்கி தரவேண்டும். இது சின்ன தொகை கிடையாது. நான் பலமுறை அந்த நிறுவனத்தை அழைத்துக் கேட்டேன். ஆனால் இன்னமும் பணம் வரவில்லை. சினிமா துறை உண்மையானது கிடையாது. நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். ஒரு சிலரால் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். கர்மா ஒன்று இருப்பதை நான் நம்புகிறேன். எனவே அவர்களை கர்மா பார்த்துக் கொள்ளும் என்று விட்டுவிட்டேன். என் நெற்றியில் ஏமாளி என்று எழுதி இருக்கறது போல, அதனால்தான் என்னை பலரும் ஏமாற்றுகிறார்கள். ஆனால் இதன் பிறகு நான் கறாராக இருப்பேன் என்று அவர் சிரித்தபடியே கூறினார்.

