Header Logo

வணிகம்
இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) பண உதவி வழங்குகிறது

May 26, 2026 - 01:31 PM -

0

இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) பண உதவி வழங்குகிறது

2025 ஆம் ஆண்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் பேரழிவுத் தாக்கங்களிலிருந்து இலங்கை தொடர்ந்து மீண்டு வரும் நிலையில், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM), 7 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பண உதவிகளை வழங்கியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மத்திய அவசரகால நிவாரண நிதியத்தின் (CERF) ஆதரவுடன், இலங்கை அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக அமுல்படுத்தப்பட்ட பண அடிப்படையிலான இவ் உதவி திட்டத்தின் (Cash Based Intervention - CBI) நிறைவு நிகழ்வு புத்தளம் மாவட்டத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மாவட்ட அதிகாரிகள், இலங்கை மற்றும் மாலைதீவிற்கான புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தலைமை அதிகாரி கிறிஸ்டின் பார்கோ, சமுதாயத் தலைவர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

புத்தளம், பதுளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள 4000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இப் பண உதவி வழங்கப்பட்டது. புயலால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களைை முன்னுரிமையாகக் கொண்டு, தெரிவிற்கான பிரதான அளவுகோல்களின் அடிப்படையில், வீட்டு பழுதுபார்ப்புகளுக்காக மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களுக்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இப் பண உதவி வழங்கப்பட்டது. இவ் உதவி, ஐ.நா. மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் (Humanitarian Priorities Plan - HPP) ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ் பண உதவிகளுடன், 60 இடங்களில் உள்ள குடும்பங்களுக்கு 4700- இற்கும் மேற்பட்ட உணவல்லாத ஏனைய அத்தியாவசிய பொருட்களும் (Non-Food Items - NFI) விநியோகிக்கப்பட்டன. 

“இந்த பண அடிப்படையிலான உதவி திட்டம், மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல்துறை ஒருங்கிணைந்த பதிலளிப்பின் ஒரு முக்கிய அங்கமாகும். இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பங்காளர்களும் தங்குமிடம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குகின்றனர்,” என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் தெரிவித்தார். “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள் அதிகரித்து வரும் நிலையில், உயிர்களை பாதுகாக்கவும் சமூகங்களின் தாங்குதிறனை வலுப்படுத்தவும் இத்தகைய ஒருங்கிணைந்த பதிலளிப்பு அவசியம்” 

கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி டிட்வா புயல் கரையை கடந்தபோது, கடந்த இருபது ஆண்டுகளில் இலங்கை சந்திக்காத மிகக் கடுமையான வெள்ளப் பெருக்குகளும் மண்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த பேரிடர், அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 2.2 மில்லியன் மக்களை பாதித்ததுடன், அவர்களது வீடுகளுக்கு ஏற்படுத்திய கடுமையான சேதங்களாலும் நாளாந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களாலும் பல குடும்பங்கள் பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. IOM இன் இடம்பெயர்வு கண்காணிப்பு தரவமைப்பின் (Displacement Tracking Matrix - DTM) தகவலின்படி, பேரிடரின் உச்சகட்டத்தில் சுமார் 290,000 பேர் இடம்பெயர்ந்திருந்தனர். 

பேரிடர் பதிலளிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து IOM உடனடியாக அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்களை விநியோகித்ததுடன், இடம்பெயர்வு கண்காணிப்பு தரவமைப்பையும் (DTM) செயல்படுத்தியது. அத்துடன் தற்போது இடைக்கால தங்குமிடங்களை அமைக்கும் பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. மேலும், பாதுகாப்பான முகாம் முகாமைத்துவத்திற்காக சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனத்துடன் (IFRC) இணைந்து IOM Shelter, Land and Site Coordination (SLSC) குழுவை இணைத் தலைமையேற்று வருகிறது. 

“பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு உதவுவது தொடர்பில் IOM மகிழ்ச்சியடைகின்றது” என்று இலங்கை மற்றும் மாலைதீவிற்கான புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தலைமை அதிகாரி கிறிஸ்டின் பார்கோ தெரிவித்தார். “இந்த உதவி, குடும்பங்கள் தங்களின் முன்னுரிமைகளுக்கேற்ப பணத்தை செலவழிக்கும் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் வழங்குவதோடு, அவர்கள் தங்கள் வீடுகளையும் வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்ப உதவுகிறது.” 

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்கள் அதிக தீவிரத்துடனும் அடிக்கடியும் இலங்கையை பாதித்து வரும் நிலையில், அவற்றுக்கு எதிராக சமூகங்கள் தயாராக இருக்கவும், பதிலளிக்கவும், மீண்டு வரவும் ஆதரவு வழங்குவதில் IOM தனது அர்ப்பணிப்பை தொடர்ந்து பேணுகிறது. 

இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, பாதிப்பிற்குள்ளாகும் தன்மையை குறைத்தல், அபாயங்களைத் தணித்தல், ஆதாரபூர்வமான பதிலளிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் எதிர்கால பேரிடர்களை எதிர்கொள்வதற்கான சமூகங்களின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை IOM தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.


MOST READ

காணொளி
மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

கொடியேற்றம்!

கொடியேற்றம்!

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

காணி உரிமைக்கும், வீட்டு உரிமைக்கும் வித்தியாசம் தெரியுமா?

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக மக்களுக்கு சிறிதும் தீங்கு விளைவிக்காத கட்சி தான் நாங்கள்!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

மலையக அதிகார சபையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

காணியுரிமையை மலையக மக்களுக்கு வழங்குங்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

நவீன உலகத்திலும் கொத்தடிமைகளாக வாழும் மலையக மக்கள்!

title