Jun 1, 2026 - 10:14 AM -
0
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ளது.
இந்தத் தொடரின் மூன்று போட்டிகளும் ஜூன் 3 முதல் ஜூன் 8 வரை ஜமேக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளன.
வழமை போல ஷாய் ஹோப் மேற்கிந்திய தீவுகள் அணியை வழிநடத்தவுள்ளதுடன், முக்கிய வீரர்கள் பலரின் வருகை அணிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
அதற்கமைய ஷாய் ஹோப் தலைமையிலான குழாமில், அகீம் அகஸ்டே, ஜோன் காம்ப்பெல், கீசி கார்ட்டி, ரோஸ்டன் சேஸ், மெத்யூ போர்ட், ஜஸ்டின் கிரீவ்ஸ், சிம்ரோன் ஹெட்மையர், அமீர் ஜங்கூ, அல்சாரி ஜோசப், ஷமார் ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜெய்டன் சீல்ஸ், ஷமார் ஸ்பிரிங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த 2025 ஜூலை முதல் தமது முதுகு பகுதியில் ஏற்பட்ட உபாதையினால் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப், அதிலிருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு பின்னர் அவர் முதன்முறையாக ஒருநாள் அணியில் இணைந்துள்ளார்.
அத்துடன், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நியூசிலாந்து தொடரைத் தவறவிட்ட சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியும் அணிக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

