Jun 1, 2026 - 05:00 PM -
0
சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி இலங்கையர்களை டுபாய் மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பி வைத்த டுபாய் சுத்தா என்ற ரன்தெடிகே நிஷாங்க பிரியதர்ஷன என்பவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் குழுவினர் இன்று (1) கடுவலை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
டுபாயில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இவர் 7 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதியளித்தபடி வேலை பெற்றுத்தரவில்லை என கிரிஉல்ல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பியவர் என்பதுடன், அவர் கடுவலை பகுதியில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவரைக் கைது செய்யச் சென்றபோது, விசாரணை அதிகாரிகளைத் தவிர்த்து தனது தனிப்பட்ட காரில் தப்பியோட முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் புளத்சிங்கள பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினர் என்பதுடன், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியே இந்த மோசடியை நடத்தியுள்ளார்.
சுற்றுலா விசா மூலம் டுபாய்க்கு வேலைக்காக ஆட்களை அனுப்பி வைக்கும் முக்கிய கடத்தல்காரர் இவராவார் என்பதுடன், இதற்கு முன்னரும் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (02) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பணியகத்தின் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி எவரையும் வெளிநாட்டு வேலைகளுக்குப் பணியமர்த்துவது சட்டவிரோதமானது என்பதுடன், நீங்களோ அல்லது உங்களது உறவினர்களோ வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நபரிடம் பணம் கொடுத்து ஏமாற்றமடைந்திருந்தால், பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் 011 288 2229 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

