Jun 3, 2026 - 04:24 PM -
0
ஒரு தசாப்தத்தின் பின்னர் ஏற்படும் மிக வலுவான எல்-நினோ (El-Nino) நிலைமையின் தாக்கம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக ஜூலை - ஓகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறண்ட காலநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உள்நாட்டு வானிலை அவதானிப்பு திணைக்களமும் தெரிவித்துள்ளது.
எல்-நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை சாதாரண அளவை விட அதிகரிப்பதன் மூலம், உலகளாவிய வானிலை வடிவங்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு இயற்கை நிகழ்வாகும்.
இதன் விளைவாக, கிழக்கிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள், வெப்பமான அலைகளை ஆசிய பிராந்தியத்தை நோக்கி திருப்புவதற்கு செல்வாக்கு செலுத்துவதுடன், சம்பந்தப்பட்ட காலப்பகுதியில் வளிமண்டல வெப்பநிலை சாதாரண மதிப்பை விட அதிகரிக்கும்.
இந்த எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில் சாதாரண மழைவீழ்ச்சி குறைவடைந்து, கடுமையான வறட்சி நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இதன் மற்றொரு விளைவாக, பசிபிக் பெருங்கடலை ஒட்டிய வட மற்றும் தென் அமெரிக்க கண்ட நாடுகளுக்கு அதிக மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
இதற்கமைய, இந்த ஆண்டின் ஜூன் முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதிக்குள் எல்-நினோ நிலைமை ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.
இந்த எல்-நினோ நிலைமை இந்த ஆண்டின் நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கைக்கு இதன் தாக்கம் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த எல்-நினோ நிலைமையினால் வானிலை ரீதியான தாக்கங்கள் மாத்திரம் ஏற்படுவதில்லை.
இதன் தாக்கம் காரணமாக 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆசியா முழுவதும் பயிர்ச்செய்கை மற்றும் உணவு விநியோகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் போர் காரணமாக நிலவும் உரத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இதன் காரணமாக கடுமையான மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

