Jun 4, 2026 - 11:31 AM -
0
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாக அடைமழையுடன் கூடிய கடும் காற்று வீசி வருகின்றது. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறிப்பாக ஹட்டன், நுவரெலியா, தலவாக்கலை, லிந்துலை, டிக்கோயா, அக்கரபத்தனை மற்றும் கொட்டகலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகின்றது.
இதனுடன் பலத்த காற்றும் வீசுவதால் மரக்கிளைகள் முறிந்து வீதிகளில் விழுந்துள்ளதுடன், சில இடங்களில் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலவாக்கலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியின் மடக்கும்பர புதுக்காடு பகுதியில் இன்று அதிகாலை பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதியுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது வட்டக்கொடை வரையிலான போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பாதை சீரமைக்கப்படும் வரை, சாரதிகளை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடும் பனிமூட்டத்துடன் மழை பெய்து வருவதால் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, வேகக் கட்டுப்பாட்டுடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடும் காற்று காரணமாக நேற்று (03) இரவு முதல் ஹட்டன், கொட்டகலை, அக்கரபத்தனை உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை ஊழியர்கள் சேதமடைந்த மின் இணைப்புகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், தொடர்ச்சியான மழை காரணமாக சில பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தாமதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி மின்சாரத் துண்டிப்பு ஏற்படுவதனால் திருடர்களின் நடமாட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பான வழிமுறைகளைக் கையாண்டு விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலைச்சரிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், மண்சரிவு அபாயப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவுறுத்தியுள்ளது.
வீடுகளின் அருகே நிலத்தில் பிளவுகள் தோன்றுதல், மரங்கள் சாய்தல்,தண்ணீர் ஊற்றுகள் திடீரென அதிகரித்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், சிற்றாறுகள் மற்றும் கால்வாய்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. எனவே, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாக, பெருந்தோட்டங்களில் தேயிலை உற்பத்தி பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகப் பெருந்தோட்டத்துறை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, தொடர் மழை காரணமாகக் கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளுக்குத் தேவையான புற்களை அறுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மக்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் வர்த்தக நடவடிக்கைகளும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, எதிர்வரும் நாட்களிலும் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வானிலை மாற்றங்களின் போது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்பதால், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து அவதானமாகச் செயற்படுமாறு மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
--

