Jun 4, 2026 - 05:58 PM -
0
இரத்தினபுரி பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எஹெலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (4) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பதிகாரி தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முறைப்பாட்டாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணிக்கக்கல் ஒன்று திருடப்பட்டமை தொடர்பான முறைப்பாடொன்றின் விசாரணையினை தவிர்த்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமான முறையில் சாட்சிகள் மற்றும் சந்தேகநபர்களுக்குச் சொந்தமான பணத்தை வலுக்கட்டாயமாகப் பெற்றுக்கொண்டு விசாரணை நடவடிக்கைகளை அவர் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாதிக்கப்பட்ட இருவரால் எஹலியகொட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையக் கிடைத்த உத்தரவின் பேரில் இந்த கைது இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

