Jun 14, 2026 - 06:35 PM -
0
கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தலைமையில் இன்று (14) திறந்து வைக்கப்பட்டது.
ஒரு வருடத்திற்கும் குறைவான குறுகிய காலத்திற்குள் சுமார் 4 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்ட இந்த புதிய பொலிஸ் கட்டடம், மக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் தரமான பொலிஸ் சேவையை வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது, பழைய பொலிஸ் கட்டடம் அமைந்திருந்த காணியின் உரிமையை அதன் சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதைக் குறிக்கும் வகையில், ஏழு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் நிகழ்வும் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, மக்களுக்கு திறமையான, நம்பகமான மற்றும் தரமான சேவையை வழங்குவது இலங்கை பொலிஸாரின் முதற்பொறுப்பாகும் என வலியுறுத்தினார்.
அத்துடன், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் அல்லது வேறு எந்தப் பாகுபாடும் இன்றி, இலங்கையர்கள் என்ற வகையில் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் முதன்மையான பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட இலங்கை பொலிஸின் சிரேஷ்ட அதிகாரிகள், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச மக்கள் என பெரும்பாலானோர் கலந்துகொண்டனர்.

