Jun 15, 2026 - 11:35 AM -
0
ஜனாதிபதிகளின் அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் மட்டுமே நடக்கும் வெள்ளை மாளிகை வளாகத்தில், முதல் முறையாக UFC போட்டிகளுக்கான பிரத்யேக எண்கோண கூண்டு (Octagon) அமைக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் 80 ஆவது பிறந்தநாளான நேற்று (14) இந்த பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், UFC அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி டானா வைட் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு இடையே அமர்ந்து போட்டிகளை மிக அருகில் இருந்து ரசித்தார்.
டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக் டிரம்ப், இவான்கா டிரம்ப், டிஃப்பனி டிரம்ப் மற்றும் பேரன் டிரம்ப் உட்பட டிரம்ப்பின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பாராமவுண்ட் ஸ்கைடான்ஸ் தலைவர் டேவிட் எலிசன் போன்ற முன்னணி உலகப் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு டிரம்பை நேரில் சந்தித்தனர்.
போட்டியின் தொடக்கத்தில் அமெரிக்க தேசிய கீதம் பாடப்பட்டபோது, அமெரிக்க கடற்படையின் 'புளூ ஏஞ்சல்ஸ்' மற்றும் விமானப்படையின் 'தண்டர்பேர்ட்ஸ்' போர் விமானங்கள் வானில் அசுர வேகத்தில் பறந்து 'சூப்பர் டெல்டா' வடிவத்தை உருவாக்கி சாகசம் செய்தன. போட்டிகளின் இடையே அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் இணைந்து அதிபர் டிரம்பிற்கு "ஹேப்பி பர்த்டே" பாடல் பாடி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
வெள்ளை மாளிகை அமைந்துள்ள 'தி எலிப்ஸ்' பகுதியைச் சுற்றி இரும்பு வேலிகள் மற்றும் பைக்-ரேக் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சீக்ரெட் சர்வீஸ் பொலிஸாரின் கவச வாகனங்கள் வீதிகளில் உலா வந்தன. மேலும் வான்வெளியில் ஹெலிகாப்டர்கள் மற்றும் மறைமுகமாக துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளை மாளிகையில் இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பாகவே, ஈரான் நாட்டுடன் ஒரு முக்கிய உடன்படிக்கை எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி முடிந்த கையோடு, டிரம்ப் உடனடியாக G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டுச் சென்றார். இந்த நிகழ்வை வெள்ளை மாளிகை வளாகத்தில் இருந்தபடி சுமார் 4,000 இற்கும் மேற்பட்ட விஐபிக்களும், அதற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களும் கண்டு ரசித்தனர்.

