Jun 22, 2026 - 07:49 PM -
0
குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் அறிவுறுத்தல் சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும், ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று தினங்களில் 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக வேகமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (22) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போதே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும், முப்படைகளின் தலைமையில் கண்காணிப்புப் பிரிவொன்றை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கும், தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள 'பிரஜா சக்தி' மற்றும் பொதுப் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாடசாலைகள், தொழிற்சாலைகள், அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் ஆகியவையே டெங்கு நும்புகள் அதிகளவில் போஷிப்படையக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த இடங்களை உள்ளடக்கிய குறுகிய கால நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கலந்துரையாடலில் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அத்துடன், அவ்வப்போது ஏற்படும் இவ்வாறான டெங்கு பரவல் போக்குகளைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

