Jun 23, 2026 - 03:34 PM -
0
தமிழகத்தில் 19 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவோரின் எண்ணிக்கை சமீபகாலமாக உயர்ந்து வருவதாகத் தமிழகப் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு வைத்தியத் துறை நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் சமூக ஆர்வலர்கள் மற்றும் வைத்திய வல்லுநர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை கடந்த சில ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் உள்ள கர்ப்பிணிப் பெண்களின் தரவுகளைக் கொண்டு விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
இதில், குறிப்பாக 15 முதல் 19 வயதிற்குட்பட்ட வளரிளம் பெண்களின் கர்ப்ப விகிதம் கணிசமாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 16 மில்லியன் சிறுமிகள் பதின்ம வயதில் கர்ப்பமடையும் சூழலில், தமிழகத்திலும் இந்த எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பது இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சிறு வயதிலேயே கர்ப்பமடைவது தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்குமே கடுமையான வைத்தியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்று வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
பதின்ம வயதில் பெண்களின் இடுப்பு எலும்பு மற்றும் கர்ப்பப்பை முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. இதனால் பிரசவத்தின் போது அதிக சிக்கல்கள் ஏற்படுகின்றன.
போதிய உடல் முதிர்ச்சி இல்லாததால், பிரசவ கால மரணங்கள் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
சட்டவிரோதமாக நடத்தப்படும் குழந்தை திருமணங்கள். கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பதின்ம வயது நல்வாழ்வு மற்றும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமை.
மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களின் தவறான பயன்பாடு மற்றும் போதிய வழிகாட்டல் இல்லாமை.
இந்தச் சிக்கலான நிலையைத் தீர்க்கவும், பதின்ம வயது கர்ப்பங்களைத் தடுக்கவும் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆரம்பகாலத் திருமணங்களைத் தடுத்தல், வறுமை ஒழிப்பு, வளரிளம் பெண்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் பாடசாலை - கல்லூரி மாணவிகளுக்கு முறையான பாலியல் மற்றும் நல்வாழ்வு விழிப்புணர்வை வழங்குவது மட்டுமே இந்தச் சிக்கலைத் தீர்க்க அரசு எடுத்து வரும் அவசரக் கால நடவடிக்கைகளாகும்.
விழிப்புணர்வுப் பற்றாக்குறை மற்றும் சமூகக் காரணிகளால் தமிழகத்தில் பதின்ம வயது கர்ப்பங்கள் 15,000 இற்கும் மேல் கடந்துள்ள சூழலில், இதனைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்த விழிப்புணர்வுத் திட்டங்கள் தேவை எனச் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

