Jun 23, 2026 - 05:46 PM -
0
சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளராக ஜே. எம். யூ. கே. ஜயசேகர, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான ஜயசேகர, இந்த நியமனத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, ஊவா மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், சுற்றுலா, போக்குவரத்து, கலாசாரம் மற்றும் கைத்தறி மற்றும் சிறுதொழில் அமைச்சின் செயலாளராகப் கடமையாற்றி வந்தார்.
மேலும், அவர் ஊவா மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி, நன்னீர் மீன்பிடி போன்ற அமைச்சுகளின் செயலாளராகவும், ஊவா மாகாண பிரதிப் பிரதம செயலாளர், ஊவா மாகாண சபையின் செயலாளர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார்.
அத்துடன் எம்பிலிபிட்டிய தலைமைத்துவ அபிவிருத்தி தேசிய மத்திய நிலையத்தின் பணிப்பாளர், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் நாயகமாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, மொனராகலை, தனமல்வில மற்றும் சியம்பலாண்டுவ ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும் ஜயசேகர கடமையாற்றியுள்ளார்.

