Jun 23, 2026 - 06:54 PM -
0
ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டில் பாதுகாப்பான நெல் இருப்பை பராமரிப்பது அத்தியாவசியமானது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இது ஒரு சாதாரண நடைமுறையாக அன்றி, விசேட கவனத்திற்குரிய ஒரு விடயமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுபோக நெல் கொள்வனவுத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த வருட சிறுபோகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் இருப்புக்கள் இன்னும் போதுமான அளவில் சந்தைக்கு விநியோகிக்கப்படாமை ஒரு பிரச்சினையாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த நெல் களஞ்சியசாலைகளை விடுவிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான முன்மொழிவுகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அத்துடன், இந்த சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குக் தேவையான நிதியை ஒதுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இங்கு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட மட்டத்தில் தற்போதுள்ள களஞ்சியசாலைகளின் நிலைமைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
களஞ்சியசாலைகளின் நிலைமை மற்றும் பாதுகாப்பான இருப்புக்கள் குறித்து துல்லியமான தரவு அமைப்பு ஒன்றைப் பராமரிப்பதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

