Jun 24, 2026 - 09:39 AM -
0
இலங்கையின் ஹெலிகொப்டர் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கான திறன்கள், மற்றும் வான் மற்றும் கடல்சார் களங்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு ஒரு பெரும் உத்வேகத்தையளிக்கும் வகையில், அமெரிக்காவானது நேற்று (23) தனது நாட்டில் தயாரிக்கப்பட்ட பத்து TH-57 Sea Ranger (Bell 206) ஹெலிகொப்டர்களை இலங்கை விமானப்படைக்கு முறைப்படி மாற்றியது. இது அமெரிக்க - இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்துவரும் பலத்தினைப் பிரதிபலிக்கும் ஒரு மைல்கல்லாகும்.
இரத்மாலனை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் மற்றும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் ஆகியோர் தலைமைதாங்கினர்.
அமெரிக்காவின் Excess Defense Articles (EDA) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மாற்றப்பட்ட டெக்சாசில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகொப்டர்கள், இதற்கு முன்பு விமானிகளைப் பயிற்றுவிப்பதற்காகவும், அன்றாட பயன்பாடுகளுக்காகவும் அமெரிக்க கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை, இலங்கை விமானப்படையின் நவீனமயமாக்கப்பட்ட பயிற்சி வானூர்தித் தொகுதியின் முதுகெலும்பாகச் செயற்படுவதோடு, மனிதாபிமான நெருக்கடிகளுக்கான பதிலளிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதன் கடல்சார் ஆளுகைப்பகுதியினைப் பாதுகாப்பதற்கும் தேவையான இலங்கையின் திறனை அதிகரிப்பதற்குத் துணைபுரியும்.
பெல் ரக ஹெலிகொப்டர் தளங்களை இயக்குவதில் இலங்கை விமானப்படைக்கிருக்கும் நிரூபிக்கப்பட்ட அனுபவம் காரணமாக, இயல்பாகவே இவ்வானூர்திகள் அதற்குப் பொருத்தமானவையாக அமைகின்றன. TH-57 வானூர்திகள் கடந்த வருடம் வரை அமெரிக்க கடற்படையில் தொழிற்பாட்டு ரீதியிலான சேவையில் இருந்ததால், அவை பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்குத் தயாரான நிலையிலேயே இலங்கைக்கு வந்து சேர்கின்றன.
“இலங்கையின் விமானப்படைத் திறன்களை நவீனமயமாக்குவதற்கும், அடுத்த தலைமுறை விமானிகளுக்குப் பயிற்சியளிப்பதற்கும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இவ்வானூர்திகள் உதவி செய்யும். மிக முக்கியமாக, அசைக்க முடியாத எமது பங்காண்மையின் ஒரு வலிமையான சின்னமாக அவை திகழ்கின்றன. பிராந்தியம் முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பிற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பு உறுதியானது, மேலும் இலங்கையுடனான அந்த மிகவும் வலுவான, ஒத்துழைப்புடன் கூடிய பங்காண்மையானது இன்று இங்கு முழுமையாக வெளிப்படுகிறது.” என ஜெனரல் ஷ்னைடர் தெரிவித்தார்.
“இரு தரப்பினருக்கும் தெளிவான முடிவுகளையும், நன்மைகளையும் வழங்கும் இப்பரிமாற்றமானது, ஒரு உண்மையான பங்காண்மை எப்படியிருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். தமது மக்களைப் பாதுகாப்பதற்கும், தமது நாட்டின் இறையாண்மை, மற்றும் தமது நாட்டின் வான்வெளி மற்றும் நீர்ப்பரப்பு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு இலங்கை விமானப்படைக்குத் தேவையான வேகத்தினையும், செயல்வீச்சினையும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகொப்டர்கள் வழங்குகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய்ப் போக்குவரத்தும், மூன்றில் ஒரு பங்கு கொள்கலன் போக்குவரத்தும் இடம்பெறும் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களை உள்ளடக்கிய, உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகள் சிலவற்றின் மத்தியில் இலங்கை அமைந்துள்ளது.
இலங்கையின் கடல்சார் களம் பாதுகாப்பானதாக இருக்கும்போது, அக்கப்பல் போக்குவரத்துப் பாதைகளும் போக்குவரத்திற்காகத் திறந்திருக்கும், வர்த்தகம் தடையின்றி நடைபெறும். அப்போது இந்து சமுத்திரம் நிர்ப்பந்தத்திற்கான ஒரு களமாகவன்றி, செழிப்பிற்கான ஒரு நெடுஞ்சாலையாக நிலைத்திருக்கும். அது அமெரிக்காவிற்கு நேரடி முக்கியத்துவமுடையதாகும்.” எனக்குறிப்பிட்டு இப்பரிமாற்றத்தின் விரிவான முக்கியத்துவத்தினை உதவிச் செயலாளர் கபூர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அமெரிக்கத் தூதரகத்தின் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஜேன் ஹொவெல், பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. அருன ஜயசேகர, பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொன்த, இலங்கை விமானப் படையின் கட்டளைத் தளபதி எயா மாஷல் பந்து எதிரிசிங்ஹ, எயா வைஸ் மாஷல் லசித்த சுமனவீர, அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இராஜதந்திர அலுவலர் லெப். கேனல் மெத்திவ் ஹவ்ஸ், உட்பட பல்வேறு அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் உரைகள், வானூர்திகளை நிறுத்திவைத்து காட்சிப்படுத்தியமை மற்றும் விமானத்தின் பறக்கும் செயல்விளக்கம் என்பன இடம்பெற்றன.

