Jun 24, 2026 - 02:14 PM -
0
ருகுணு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர், டெங்கு காய்ச்சல் காரணமாக துரதிர்ஷ்டவசமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு அகால மரணமடைந்தவர் மாத்தறை, தெனியாய பகுதியைச் சேர்ந்த, ருகுணு பல்கலைக்கழகத்தின் 46ஆவது மாணவர் குழுவைச் சேர்ந்த சந்தலி தாரகா என்ற மாணவியாவார்.
அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது நெருங்கிய தோழி ஒருவருக்கு வட்ஸ்எப் மூலம் அனுப்பிய செய்தியில், "இறக்காமல் இருந்தால் வருவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது அவர் தனது தோழிக்கு அனுப்பிய கடைசிச் செய்தியாகும் என்பதுடன், அவரது மறைவு பல்கலைக்கழகம் முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சந்தலியின் மறைவு குறித்து அவரது சக மாணவ, மாணவிகள் சமூக வலைத்தளங்களில் உருக்கமான பதிவுகளை இட்டு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருவதுடன், இதுபோன்ற அகால மரணம் இனிவரும் காலங்களில் ஏற்படக் கூடாது என்றும் பிரார்த்தித்துள்ளனர்.
இன்னுமொரு மாணவரின் உயிர் டெங்கு நோய்க்கு பலியாகும் வரை காத்திருக்காமல், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை உடனடியாக அமல்படுத்துமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரிகளிடம் பலத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மாத்தறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியும் டெங்கு நோய் பரவும் அதிக அபாய வலயப் பகுதியாகக் காணப்படுவதால், தங்களது பிள்ளைகள் மற்றும் அன்பானவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக சுற்றியுள்ள சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

