Jun 24, 2026 - 05:10 PM -
0
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 8 பேரை அடுத்தடுத்து விஷம் வைத்துக் கொன்ற "சைக்கோ" கொலையாளி ராம் சஹய் ஜெய்ஸ்வால் (46) என்பவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள கார்வே கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ராம் சஹய் ஜெய்ஸ்வால். இவருக்கு ஊர் மக்களுடன் பழைய தேர்தல் தகராறு, கடன் பிரச்சனை, நிலத் தகராறு, சூனியம் பற்றிய மூடநம்பிக்கை மற்றும் தனிப்பட்ட வெறுப்புகள் போன்ற நிறைய பிரச்சனைகள் இருந்துள்ளன.
இதனை மனதில் வைத்து ஒவ்வொருவரையும் தனது வீட்டிற்கு மாலை நேரத்தில் மது அருந்த வரக் கூறியுள்ளார். இன்று மது அருந்தினால், நாளை அல்லது நாளை மறுநாள் என 8 பேரும் 4 மாதங்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.
ஒன்பதாவது நபரான கார்த்திக் குமார் உயிர்தப்பி, தான் நோய்வாய்ப்படுவதற்கு முன் ராம் சஹய்யுடன் மது அருந்தியதாக ஊர்மக்களிடம் தெரிவிக்கவே இந்த சைக்கோ கில்லர் சிக்கியுள்ளார்.
விசாரணையில், எலிகளைக் கொல்லப் போவதாகக் கூறி போராக்ஸ் பவுடரை வாங்கி வந்து அதனை மதுவில் கலந்து கொடுத்துள்ளார். மேலும் முதலில் விஷத்தை நாய்களுக்கு உணவில் கலந்து கொடுத்துச் சோதித்து, அது இறந்த பிறகே மனிதர்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொலை செய்த பிறகு தப்பியோடாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது, இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு துக்கம் விசாரிப்பது போல நடித்து குடும்பத்தாருக்கு சந்தேகம் வராமல் பார்த்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து கிராம மக்கள் ஜூன் 6 ஆம் திகதி அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்ட 7 பேரின் உடல்களைத் தோண்டி எடுத்து பொலிஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர் ஒருவரது உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. தீவிர விசாரணைக்குப் பிறகு ராம் சஹய் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டு, அவர் மீது 8 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அறிக்கையின்படி, புதாலு சாஹூ(60), புத்ராம் ஜெய்ஸ்வால் (60), சத்து ராம் சாஹு, வினோத் குமார் சாஹு (38), கஜானந்த் மன்ஜி(55), சைதுராம் சாஹு (58), மகேத்ரு ராம் சாஹு (41) ஆகியோர் உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

