Header Logo
Mogo Academy

ஏனையவை
ஐ.நா. சமாதானத்தை கட்டியெழுப்பும் வாரம்!

Jun 30, 2026 - 10:50 AM -

0

ஐ.நா. சமாதானத்தை கட்டியெழுப்பும் வாரம்!
Mobitel inner

ஐக்கிய நாடுகள் பொதுச் சேவை தினத்தை முன்னிட்டு, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “Stories that Connect” (இணைக்கும் உரையாடல்கள்.) என்ற ஊடாடும் கலந்துரையாடல் நிகழ்வில், அரச துறை அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் ஒன்றுகூடினர். 

ஐக்கிய நாடுகள் சமாதானத்தை கட்டியெழுப்பும் வாரத்தின் (UN Peacebuilding Week) ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வு, நிலையான அமைதி என்பது வெறும் உத்தியோகபூர்வ ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் மட்டுமல்லாமல், நம்பிக்கை, பரஸ்பர புரிதல் மற்றும் உரிமைத்துவ உணர்வை வளர்க்கும் அன்றாட தொடர்புகளின் மூலமும் உருவாகிறது என்பதை வலியுறுத்தியது. இலங்கையில் சமூக நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் ஒருவரை ஒருவர் செவிசாய்க்கவும், வேறுபாடுகளைத் தாண்டி கலந்துரையாடவும், தங்களது வாழ்க்கையைப் பாதிக்கும் தீர்மானங்களில் பங்கேற்கவும் வாய்ப்புகளை உருவாக்குவது, சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த உதவும் என இந்நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது. 

“Human Library” (மனித நூலகம்) என்ற கருத்தாக்கத்தால் ஊக்கமளிக்கப்பட்ட இந்நிகழ்வு, பங்கேற்பாளர்கள் தங்களது வாழ்க்கை அனுபவங்கள், தனிப்பட்ட பயணங்கள் மற்றும் அரச சேவை மற்றும் உள்ளடங்கள் (Inclusion) குறித்த 

சிந்தனைகளை நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது. திறந்த உரையாடல்கள் மற்றும் பல்வேறு கண்ணோட்டங்கள் ஊடாக, பங்கேற்பாளர்கள் பரிவுணர்வு மற்றும் உரையாடல் எவ்வாறு சமூகப் பிளவுகளை குறைக்கவும், முன்கூட்டிய எண்ணங்களை சவாலுக்கு உட்படுத்தவும், பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும் உதவுகின்றன என்பதை ஆராய்ந்தனர். 

இந்நிகழ்வில் ஓய்வூதியத் திணைக்களத்தைச் சேர்ந்த சமிந்த ஹெட்டியாராச்சி, தபால் திணைக்களத்தைச் சேர்ந்த சமீஷ டீ சில்வா, கிராம உத்தியோகத்தர் சேவையின் சமலி வத்சலா குலதுங்க, கம்பஹா மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த கித்சிறி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் ரூபதர்ஷன், சமூகப் பிரதிநிதிகளான நியோஜினி விநாயகம், ஆன் சுபத்ரா பீரீஸ் மற்றும் ஷிரோமா நாமலி, மற்றும் ஊவா தொழிலாளர் அபிவிருத்தி அறக்கட்டளையின் வி. அந்தோனிஸ் ஆகியோர் உட்பட இலங்கை முழுவதிலுமிருந்தும் வருகை தந்திருந்த பொதுச் சேவையாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். 

அவர்கள், தங்களது கதைகள் மற்றும் அனுபவங்களினூடாக, மேலும் உள்ளடங்கல்மிக்க மற்றும் ஒன்றிணைக்கப்பட்ட சமூகங்களைக் கட்டியெழுப்புவதில் காணப்படும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த தனித்துவமான பார்வைகளை முன்வைத்திருந்தனர். 

“Stories that Connect” நிகழ்வு, சமாதானம் மற்றும் நெருக்கடி தவிர்ப்புக்கான சமூக உரையாடல் திட்டத்தின் (Social Dialogue for Peace and Crisis Prevention Project) ஒரு பகுதியாகும். இத்திட்டம், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் இணைந்து சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO), ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) ஆகியவற்றின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

இந்தத் திட்டம், உரையாடல் மற்றும் பங்கேற்பை வலுப்படுத்துவதன் மூலம் சமூகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும், நீடித்த அமைதிக்கான அடித்தளத்தை உருவாக்கவும் ஆதரவளிக்கிறது. இத்திட்டத்திற்கு - ஐ.நா. இலங்கை SDG நிதியம் (SDG Fund ) ஆதரவு வழங்குவதுடன், கனடா, ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம், இணைந்த பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் நிதியம் (Joint SDG Fund) மற்றும் - ஐ.நா. சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியம் ஆகியவற்றின் பங்களிப்புகளும் கிடைக்கின்றன. 

சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய நாடுகள் (UN Peacebuilding Architecture) உருவாக்கத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் நடைபெறும் முதல் ஐக்கிய நாடுகள் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான வாரத்தில், இலங்கையும் பங்கேற்கும் பல நாடுகளில் ஒன்றாகும். 

மோதல்களைத்தடுத்தல் மற்றும் அமைதியை நிலைநிறுத்துதல் ஆகியவற்றில் நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் அடைந்துள்ள முன்னேற்றங்களை இந்த வாரம் கொண்டாடுவதுடன், மேலும் அமைதியானவையும் உள்ளடங்கல்மிக்கவையும் சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடியவையும் மீண்டெழும் தன்மை கொண்டவையுமான சமூகங்களைக் கட்டியெழுப்புவதில் கலந்துரையாடல், பங்களிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் பங்கினை முன்னிலைப்படுத்திக் காட்டுகின்றது. 

ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை அரசாங்கத்துடனும் மக்களுடனும் இணைந்து, அனைவரையும் உள்ளடக்கிய வகையில் ஒரு பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது. 

கூட்டாகவும், தனது சிறப்பு நிறுவனங்கள், நிதியங்கள், திட்டங்கள் மற்றும் அலுவலகங்கள் ஊடாக, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கும், தரமான சமூக சேவைகளுக்கான சமமான அணுகலை உறுதிப்படுத்துவதற்கும், மனித வளத் திறன்களை மேம்படுத்துவதற்கும், மனித உரிமைகள் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய நாடுகள் சபை பாடுபட்டு வருகிறது.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara