Header Logo

செய்திகள்
IMF பிரதிநிதிகள் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

Jun 30, 2026 - 05:35 PM -

0

 IMF பிரதிநிதிகள் மற்றும் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பணவீக்கம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்வதேச நாணய நிதியத்தின்  பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.


இலங்கை பெற்றுள்ள பொருளாதார முன்னேற்றம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதை நோக்கமாகக் கொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவைச் சந்தித்தனர்.


இதன்போது, நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பிரதிநிதிகள் குழுவினர், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளால் எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கு தங்களது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக வலியுறுத்தினர்.


இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர், கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக தனது நன்றியைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இருதரப்பிற்கும் இடையிலான பங்களிப்பைத் தொடர்ந்து பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.


உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் நிலையான முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கை தனது எதிர்காலப் பாதையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் எனப் சுட்டிக்காட்டிய பிரதமர், குறிப்பாக மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு மத்தியில் எரிசக்தி, துறைமுகம் மற்றும் விவசாயத் துறைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி, நாட்டின் வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


வர்த்தகத்தை மேம்படுத்துதல், முதலீடுகளை ஈர்த்தல், சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அபிவிருத்தியை எட்டும் போது, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய இரண்டையும் ஒன்றாக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்றும், அதனை அடைவதற்கு கழிவு மேலாண்மை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொகுதிகள் போன்ற துறைகள் உட்பட வலுவான பொது உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதவை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அதேபோல், திறமையான பொதுச் சேவை வழங்கலுக்குத் தடையாக இருக்கும் மனித வளப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.


MOST READ

காணொளி
அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

அநுரவின் வாயை போல எல்லாமே பொய்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

நடனத்தால் உலக சாதனை படைத்த கிளிநொச்சி சிறுமி!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

இந்திய மாற்றுத்திறனாளி இளைஞனின் விழிப்புணர்வு பயணம்!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

செம்மணியில் 'உரிமைப்பந்தம்' அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தமிழில் உரையாற்றிய அமைச்சர்!

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!