Jul 1, 2026 - 10:38 AM -
0
மட்டக்களப்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பார் வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக அந்த உணவகம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று (01) நிகழ்ந்துள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த உணவகத்தில் திடீரெனப் பரவிய தீயைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புப் பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, உணவகத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு (Short Circuit) காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
தீ விபத்தின் காரணமாக உணவகத்தில் இருந்த தளபாடங்கள், சமையல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரின் முக்கிய வீதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
--

