Jul 2, 2026 - 09:52 PM -
0
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பதவியொன்றை போலியாக பயன்படுத்தி, வரி செலுத்துவோரை ஏமாற்றி பணம் பெற்ற சந்தேகநபர் ஒருவர் கொம்பனித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடி தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட ஆணையாளர் ஒருவரினால் கடந்த ஜூன் மாதம் 05ஆம் திகதி கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸாரும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட நுணுக்கமான விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபரைக் கைது செய்ய முடிந்துள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த சந்தேக நபர் போலிப் பெயர் ஒன்றைப் பயன்படுத்தி, தான் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பணிபுரிவதாகக் கூறி இந்த நிதி மோசடிகளைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் 27ஆம் திகதி கல்கமுவ பகுதியில் உள்ள அவரது வீட்டிலேயே வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஜூன் 29ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த அல்லது இவருக்காகப் பணம் அனுப்பிய நபர்கள் எவரேனும் இருப்பின், அது குறித்த விபரங்களை உடனடியாக கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்கோ அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 0112135000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

