Jul 3, 2026 - 02:37 PM -
0
ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறை, எதிர்காலத்திற்குத் தயாரான தலைமைத்துவத்தை உருவாக்கும் தனது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மேல்படிப்பு நிறுவனம் (Postgraduate Institute of Management) உடன் இணைந்து துறை முழுவதும் முன்னெடுத்த “Aspire” நிர்வாக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் 2025 இன் 36 பங்கேற்பாளர்கள் வெற்றிகரமாக பட்டம் பெற்றுள்ளதை அறிவித்துள்ளது.
இப்பட்டமளிப்பு, இத்துறையின் தொடர்ச்சியான பணியாளர் மேம்பாட்டு பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. வளர்ந்து வரும் நிர்வாக அதிகாரிகள் மத்தியில் தலைமைத்துவத் திறன்கள், வணிக அறிவாற்றல், மூலோபாயரீதியான சிந்தனை மற்றும் பல்வேறு பணிப்பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதில் அதன் கவனத்தையும் இது சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. வளர்ந்து வரும் வணிக முன்னுரிமைகளுடன் தனிப்பட்ட வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சித் திட்டம், கல்விசார் அறிவு, ஊடாடும் பங்கேற்பு நடவடிக்கைகள் மற்றும் செயற்பாட்டு நோக்கமுடைய திட்டங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கின்றது. இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்பவர்கள் தலைமைத்துவ கோட்பாடுகளை உண்மையான தொழில்முறை சூழல்களில் பிரயோகிப்பதற்கு இது அவர்களுக்கு இடமளிக்கின்றது.
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி குழுமத்தின் கீழ் இயங்கும் ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையானது இலங்கையில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட Elephant House மற்றும் Keells Krest போன்ற முன்னணி உணவு மற்றும் பான வர்த்தகப் பெயர்கள் (brands) உள்ளடக்கியுள்ளது. “Aspire” போன்ற முயற்சிகள் ஊடாக முறையாகக் கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் திறன்கள் மேம்பாடுகள் மீது இத்துறை தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றது. நீடித்து நிலைக்கும் வணிக வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் நீண்ட கால மீள்திறன் ஆகியவற்றுக்கான முக்கியமான ஊக்கிகளாக இத்தகைய மேம்பாடுகள் அமைந்துள்ளன.
ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் தமிந்த கம்லத் அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “வலிமையான, சுறுசுறுப்பான, தெளிவான நோக்கத்தால் வழிநடத்தப்படும் தலைவர்கள் எதிர்கால வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையை Aspire என்ற நிர்வாக அதிகாரிகளுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் பிரதிபலிக்கின்றது. அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் தங்களின் பணிசார் கடமைகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் திறனை வெளிப்படுத்திய இந்த 36 பங்கேற்பாளர்களின் பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவர்களின் வளர்ச்சி அவர்களுடைய தனிப்பட்ட தொழில்வாழ்வு சிறப்பதற்கான ஒரு முதலீடு மாத்திரமன்றி, எமது வணிகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சி மீதான முதலீடாகவும் காணப்படுகின்றது.”
ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் மனித வளத்துறை தலைமை அதிகாரி இமானி பெரேரா அவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எமது நிர்வாகிகளுக்கு மேலும் தாக்கமிக்க தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தேவையான கருவிகள், அனுபவ வாய்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கையை வழங்குவதன் மூலம், தனிநபர் மற்றும் கூட்டு ஆற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘Aspire’ நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிகரமான நிறைவு, நிறுவனத்திற்குள்ளேயே திறமையாளர்களை வளர்ப்பதிலும், அதிக பொறுப்புகளைக் கொண்ட எதிர்கால தலைமைப் பதவிகளுக்காக எமது பணியாளர்களைத் தயார்படுத்துவதிலும் நாம் தொடர்ந்து செலுத்தும் கவனத்தின் சான்றாகும்” என்றார்.
வணிக வளர்ச்சியை ஆதரிப்பதோடு, எதிர்கால மூலோபாயப் பொறுப்புகளுக்காக ஊழியர்களைத் தயார்படுத்தும் கட்டமைக்கப்பட்ட கற்றல், தலைமைத்துவ வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் ஊடாக தனது பணியாளர் மேம்பாட்டு செயற்திட்டத்தை இத்துறை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும்.

