Jul 7, 2026 - 06:18 AM -
0
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகள் அணியை விட 142 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இலங்கை அணி, போட்டியின் இறுதி நாளை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 549 ஓட்டங்களைக் குவித்து இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கையின் முதல் இன்னிங்ஸைப் பலப்படுத்திய லஹிரு உதார, 248 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 188 ஓட்டங்களை விளாசினார்.
மேலும், சொனல் தினூஷ 92 ஓட்டங்களையும், கமிந்து மெந்திஸ் 84 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 69 ஓட்டங்களையும் பெற்று இன்னிங்ஸிற்கு வலுசேர்த்தனர்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 499 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் 325 பந்துகளில் 180 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும், ஷாய் ஹோப் 112 ஓட்டங்களையும், ஜோன் கெம்ப்பெல் 72 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணியின் அசித்த பெர்னாண்டோ 130 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பிரபாத் ஜயசூரிய 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
50 ஓட்டங்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, லஹிரு உதார (0) மற்றும் நிஷான் மதுஷ்க (20) ஆகியோரின் விக்கெட்டுகளை 32 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்தது. இருப்பினும், நான்காம் நாள் ஆட்ட முடிவில், தினேஷ் சந்திமால் 40 ஓட்டங்களுடனும், கமிந்து மெண்டிஸ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து இலங்கை அணியின் இன்னிங்ஸைச் சீரான நிலைக்குக் கொண்டு வந்துள்ளனர்.
