Jul 7, 2026 - 05:19 PM -
0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு நோய் பரவியதால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம் அளித்துள்ளார்.
இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், டெங்கு நோயினால் 40 கைதிகள் உயிரிழந்ததாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று கூறினார்.
இது குறித்து அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"அது முற்றிலும் பொய்யான ஒரு கதை. 40 பேர் இறந்திருந்தால் அதற்கான உடல்கள் இருக்க வேண்டுமே? எந்தவொரு நோயாளிக்கும் தேவையான சிகிச்சைகள் அங்கு உள்ளன. யாருக்கேனும் காய்ச்சல் இருந்தால், (கடந்த நாட்களில்) சிலருக்கு காய்ச்சல் இருந்தது. அதற்கு முந்தைய நாள் அவ்வாறு ஒருவரே பதிவாகியிருந்தார், அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, இது தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. வைத்தியர்கள் அல்லது சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியாவிட்டால், அதற்கு அருகிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளுக்கு அவர்கள் மாற்றப்படுவார்கள். அதுதான் எங்களது நடைமுறையாகும்." என்றார்.

