Jul 8, 2026 - 12:13 PM -
0
இரட்டை கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 8 பிரதிவாதிகளுக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நீண்டகாலமாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் முடிவிலேயே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 7 பேர் இன்று (08) நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததுடன், மற்றுமொரு பிரதிவாதி ஆஜராகாத நிலையிலும் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்து தீர்ப்பை வழங்க நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், கொழும்பு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில், ஹேவா படகொடாகே குசுமாவதி மற்றும் வேலாயுதம் உதயகுமார் ஆகியோரின் கொலை மற்றும் மேலும் சிலருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளின் பேரில் சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தனிப்பட்ட முரண்பாடு முற்றியமையே இந்த குற்றச்செயலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
