Jul 8, 2026 - 04:30 PM -
0
ஆய்வுக்கு செல்லும் அமைச்சர்களால் சர்ச்சை ஏற்படுவதால், முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 ஆவது சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க. கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் த.வெ.க.வினரை தாண்டி, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (1) ஆகிய கட்சியை சேர்ந்தவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, 2026, 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால், ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
முதலமைச்சர் விஜய்யும் ஒவ்வொரு நாளும், துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளை சந்தித்து, அத்துறைக்கு தேவையான என்னென்ன அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, அமைச்சர்கள் சிலர் ஆய்வு என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளியில் சென்று ஆய்வு நடத்தி, கடைசி பெஞ்ச் மாணவர்கள் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் விவாதப் பொருளானது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இது த.வெ.க. அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய், அமைச்சர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, இனி துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமே அவர்களுடைய துறைகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேறு துறை பணிகளை ஆய்வு செய்ய செல்லக்கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார். இது அமைச்சர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
