Jul 8, 2026 - 07:36 PM -
0
தாதியர்களின் வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதாகக் கூறி, சட்டவிரோதமான முறையில் பணம் அறவிடும் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சின் செயலாளர், இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தாதியர்களின் இடமாற்றங்கள் சட்டப்பூர்வமான வழிமுறைகளின்படி, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினாலோ அல்லது மாகாண சுகாதார அமைச்சுக்களினாலோ மட்டுமே மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, அமைச்சின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி ஒருவரால் விடுக்கப்படும் எழுத்துப்பூர்வமான கோரிக்கைக்கு புறம்பாக, வேறு எந்தவொரு தரப்பினருக்கும் தாதியர்கள் தங்களின் தகவல்களை வழங்கக் கூடாது என சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மோசடிகள் அல்லது ஊழல்கள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், அதனை உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கோரியுள்ளார்.
