Jul 8, 2026 - 10:00 PM -
0
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உத்தியோகப்பூர்வ விஜயம் எனக் கூறி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் மூலம், 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணைப் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, இன்று பிற்பகல் கோட்டை நீதவான் பசான் அமரசேன முன்னிலையில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன்பின்னர் முதன்முறையாக இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, அதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
அதேநேரம், ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த வழக்குக்கு அடிப்படையாகக் குறிப்பிடப்படும் மொத்தத் தொகையில் பாதியளவு, குறித்த விஜயத்தின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்காகவே செலவிடப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளதைக் குறிப்பிட்டார்.
இருப்பினும், தனது கட்சிக்காரருக்கு பிரித்தானிய அரசாங்கமே வாகனங்களை வழங்கியதாகவும், அது தொடர்பாகப் பிரித்தானிய அரசாங்கம் பின்பற்றிய நடைமுறைகள் அடங்கிய ஆவணத்தை அரசாங்க சட்டத்தரணியிடம் ஒப்படைப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இது குறித்தும் விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட காரணிகளைப் பரிசீலித்த நீதவான், இந்த வழக்கினை மீண்டும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு அரசாங்க சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
